×

கொரோனா இரண்டாவது அலை எதிரொலி: மாமல்லபுரம் புராதன சின்னங்கள் மூடல்: சென்னை, காஞ்சி, திருவள்ளூரில் கோயில்களும் திறப்பில்லை

சென்னை: கொரோனா இரண்டாவது அலை காரணமாக மாமல்லபுரம் புராதன சின்னங்களை தொல்லியல் துறையினர் பூட்டி சீல் வைத்தனர். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக மாமல்லபுரம் திகழ்ந்து வருகிறது. இங்கு வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுனன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில், கலங்கரை விளக்கம், தலசயன பெருமாள் கோயில், புலிக்குகை உள்ளிட்ட முக்கிய சுற்றுலா இடங்கள் உள்ளன. இதனை காண்பதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் குடும்பம் குடும்பமாக பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வந்து கண்டு ரசித்து  புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து செல்கின்றனர்.

அதேபோல சென்னையில் உள்ள மியூசியத்துக்கும் ஏராளமானவர்கள் வருகின்றனர். கொரோனா காரணமாக அதுவும் மூடப்பட்டுள்ளது. மேலும் காஞ்சியில் பல பழமை வாய்ந்த ேகாயில்களும் மூடப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளது. கொரோனாவை தடுக்கவே இந்த நடவடிக்கை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா வைரஸின் இரண்டாவது அலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அப்படி இருந்த போதிலும் கொரோனா பரவல் குறைந்தபாடில்லை.  

கொரோனா வைரஸ் காரணமாக உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கடந்த சில தினங்களாக வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாமல்லபுரத்தில் கொரோனா பரவுவதை தடுக்க மத்திய தொல்லியல் துறை நேற்று முதல், மே 15ம் தேதி வரை சுற்றுலா தலங்களை மூட உத்தரவிட்டது. இதையடுத்து மாமல்லபுரம் தொல்லியல் துறை அதிகாரிகள் பூட்டுப் போட்டு பூட்டி சீல் வைத்தனர்.

தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூடல்
கொரோனா 2ம் அலை தற்போது அச்சுறுத்தி வருகிறது. எனவே, கோயில்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இதையடுத்து, காஞ்சிபுரத்தில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் முழுவதுமாக மூடப்பட்டன. அதன்படி பழமை வாய்ந்த காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், வைகுண்ட பெருமாள் கோயில், இறவாதீஸ்வரர் கோயில், பிறவாதீஸ்வரர் கோயில் உள்பட 7 கோயில்கள் மூடப்பட்டுள்ளன.

Tags : Mamallapura ,Chennai ,Kanji ,Thiruvallur , Corona, Mamallapuram, Ancient Monuments, Closure
× RELATED காஞ்சி இலக்கிய வட்ட கூட்டம்